ஞாயிறு, 26 டிசம்பர், 2010

குறுங்கவிதை

.
.
எரிச்சலூட்டுவதாய்
இருக்கிறது
இந்த மழைக்காலம்..

போன மழைக்காலத்தில்
என்னோடு இருந்தாய்
நீ..!
.
.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

எரியும் நிலவு..!

.
.
பற்றியெரிகிறது நிலவென
மனப்பிறழ்வுற்றவன்
அலறியபோது
வேடிக்கையாய்த் தெரிந்தது
ஊருக்கும் எனக்கும்..

பிறிதொரு சமயம்
நீயென்னை
உதறியெறிந்து போன
மார்கழி மாத நள்ளிரவொன்றில்
பின் நானும் கூட  கண்ணுற்றேன்
பற்றியெரியும் நிலவதனை..!
.
.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

பெருமலையொன்றின் அடிவாரமும் அதன் உச்சியும்..


.
.

பெருமலையொன்றின்
அடிவாரத்திலிருந்து
தொடங்குகிறது பயணம்..
முன்னரே தீர்மானிக்கப்படுகிறது
மலையின் உச்சியை அடைவதே
அதன் இலக்கென்று..
ஆயினும் பயணம் தொடங்கும் முன்
ஒருவரும் அறிந்திருக்கவில்லை
மலையின் உயரத்தை..

பயமுறுத்துவனவாகவும்
சவால் நிறைந்தனவாகவும் இருக்கின்றன
வழுக்குப் பாறைகள் நிறைந்த
மலையின் சரிவுகள்..
சமயங்களில் அவை
மலையடிவாரத்திற்கே
மீளக் கொண்டு சேர்த்து விடவும் செய்கின்றன
பரமபத பாம்புகளென..

பெரும்பாலோர் மலையடிவாரத்திலேயே
தங்கிப் போகிறார்கள்
அங்கேயே வசதியாயிருக்கிறதென்று..
வெகுசிலரே பயணத்தில்
முன்னேறிச் செல்கின்றனர்
கிழிந்து தொங்கும் சதைகளையும்
பொங்கிப் பெருகும் குருதியையும்
பொருட்படுத்தாது..

எப்போதும் கண்ணுக்கெட்டாத
மலையுச்சியும்
எப்போதும் தென்பட்டுக் கொண்டேயிருக்கும்
மலையடிவாரமும்
தொடர்ந்து
நிலைநிறுத்திக் கொண்டேயிருக்கின்றன
நினைவில் பயத்தை..

இடை தங்கிப் போனவர்கள் நீங்கலாய்
வெகு சொற்பமானவர்களே
மலையின் உச்சியை அடைகிறார்கள்
பயத்தினூடாய்த் தொடரும் பயணத்தில்..

தங்களுக்கிடையேயான
உரையாடலுக்குப் பின்
மலையுச்சியை அடைந்தவர்கள்
பிரமித்துப் போகிறார்கள்
தாங்கள் பயணித்து வந்த பாதைகள்
வேறு வேறானவை என்பதையறிந்து..

இறுதியாய்
கழுத்து நரம்புகள் புடைக்க
தொண்டையில் குருதி கசிய
அவர்கள் உரத்துக் கத்துகிறார்கள்-
மலையடிவாரத்தை விடவும்
மலையின் உச்சி
எவ்வகையிலும் மேம்பட்டதில்லையென்று..

அந்தப் பேரரவம்
எல்லையற்ற பெருவெளியெங்கும்
காற்றினூடே கலந்து விரவி
காணாமல் போய்விடுகிறது
பெருமலையின் அடிவாரத்தை
அடையும் முன்பாக..
.
.

செவ்வாய், 23 நவம்பர், 2010

ஆறுவதில்லை நெஞ்சம்..



மழைக்காலச் சாலையைக்
கடக்கும் ஊர்தியொன்று
சட்டென மேலே வாரியிறைத்திடும்
சேற்றைப் போல
எதிர்பாராத தருணங்களில் வீசி விடுகிறாய்
சுடு சொற்களை..!

ஆயினும்
சேற்றை உதறியவாறு
நகர்ந்து செல்லும்
வழிப்போக்கனைப் போல
அத்தனை எளிதாய்
ஆறுதல் கொள்வதில்லை
ஈரம் கசியும் விழிகளும்
காயம்பட்ட நெஞ்சமும்..!



ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கிளை முறிந்த மரங்கள்


.
.
எதுகை மோனைகளிட்டு
உவமை உருவகங்கள் கூட்டி
அணிகள் சேர்த்து
அழகு பார்த்த பின்னும்
கிளை முறிந்த மரங்களென
ஊனப்பட்டு நிற்கின்றன
உன் மீதான காதலைச் சுமந்து வரும்
என் சொற்கள் யாவும்..!
.
.

திங்கள், 13 செப்டம்பர், 2010

நகரும் காட்சிகள்..


வழமையான ரயில் பயணங்களில்
நகரும் ரயிலுக்கு வெளியே
எதிர்த் திசையில்
கடந்து போகும் காட்சிகளினூடே
ஏதாவதொன்றில்
லயித்து விடுகிறது மனம்..

கையசைத்துச் செல்லும் சிறுவர்கள்
பால்யத்தை நினைவுபடுத்திப் போகிறார்கள்..

மொட்டை மாடியில் நின்றபடி
குழந்தைக்குச் சோறூட்டும் தாய்
ஏக்கப் பெருமூச்சொன்றை வரவழைக்கிறாள்..

தொலைவில்
சிறகடித்துப் பறக்கும் பறவையொன்று
மனித சுதந்திரத்தை
மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது..

அழகாயிருக்கும் வீடொன்று
யாரோ ஒருவரின்
கனவு நிறைவேறியதன்
குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறது..

உயர்ந்திருக்கும் மலையொன்று
செருக்கின் மிச்ச சொச்சங்களைச் சிதறடித்து
மண்டியிடச் சொல்கிறது..

உயிர் வீணையின் நரம்புகளில்
சுரம் மீட்டிப் போகின்றன
இவையும் இவையொத்ததுமான காட்சிகள்..

எதிர்வரும் நாளொன்றின்
ஏதாவதொரு நேரத்தில்
ரயிலுக்கு வெளியே காட்சியாகக்கூடும்
யாருக்கேனும் நானும்..

ஆயினும்
காட்சியாவதில் இல்லை;
காண்பதில்தான் இருக்கிறது
களிப்பென்பது..
.
.

சனி, 28 ஆகஸ்ட், 2010

தனிமைக் காலங்கள்


.
1.
ஆறுதலாய் நான்..
பயமற்று
எப்போதும் என்னுடனிருக்கிறது
தனிமை.
----------------------------------------------------
2.
தனித்திருக்கிறேன்..
நிலவே
நீயேனும் வருவாயா
எனதறை நிரப்ப?
----------------------------------------------------
3.
என் தனிமை
அறிமுகம் செய்து கொள்கிறது
புத்தனிடம் தன்னை.
----------------------------------------------------
4.
நீண்ட நாள் தனிமை
துயரமானது;
தற்காலிகத் தனிமை
இன்னும் துயரமானது.
----------------------------------------------------
5.
தனிமையில் அழுவதில்
வசதியிருக்கிறது;
கோழையென்று யாரும்
குற்றம் சாட்டுவதில்லை.
----------------------------------------------------
6.
கடவுள் கூட
தனித்திருப்பதில்லை
மனிதக் கற்பனையில்.
----------------------------------------------------
7.
தனித்திருக்கின்றன
வானுக்கும் மண்ணுக்கும்
இடையில்
மழைத் துளிகள்.
----------------------------------------------------
8.
காலைச் சுற்றி வரும் நாயும்
தனிமையும் ஒன்று;
துரத்தியடிப்பது
நிரந்தரத் தீர்வாகாது.
ஒன்று
நாயை வளர்க்க வேண்டும்;
இல்லை
அதைக்  கொன்று போட வேண்டும்.
.
.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அலையும் இருப்பு

.
.
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்
குப்பைகள் நிறைந்ததான
உலகமிதில்..

தொடக்கத்தில்
எனக்கெனவொரு
குப்பை கையளிக்கப்பட்டு
அறிமுகப்படுத்தப்பட்டது
ஆன்மீகமென..

பின்னொரு நாளில்
வேறு சிலரால்
அதன் அடையாளம் மாற்றப்பட்டது
நாத்திகமென..

தொடர்ந்து
'துவம்'களெனவும் 'இசம்'களெனவும்
அதன் வடிவம் மாறிக்கொண்டேயிருந்தது;
நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்
பச்சோந்தியைப் போல..

ஆயினும்
பிறிதொருவரின் குப்பையை விடவும்
அது உயர்ந்ததாகவுமில்லை;
தாழ்ந்ததாகவுமில்லை
எந்தவொரு நாளிலும்..

அவ்வப்போது
கூட்டிப் பெருக்கி
வெளியே வீசிய பின்னும்
குறையாமல் கூடிக்கொண்டேயிருக்கிறது
குப்பை இன்னும்..

இப்போதெல்லாம்
நிலை கொள்ளாமல்
அலைந்து கொண்டேயிருக்கிறது
என்னிருப்பு;
குப்பைகளற்றதானவொரு
வேற்றிடம் தேடி..
.
.

சனி, 7 ஆகஸ்ட், 2010

நீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்


குறிப்பு 1 
உன் வருகை நிகழும்
ஒவ்வொரு முறையும்
சொற்களற்ற
கவிதையையொத்திருக்கிறது
மௌனத்தால் நிரம்பியிருக்கும்
எனதறை..

குறிப்பு 2 
சொல்லிவிட்டு
எனதறைக்குள்
நீ
நுழையும்போதெல்லாம்
சொல்லாமலே வெளியேறுகின்றன
எனது கனவுகள்..

குறிப்பு 3 
நீ
அறியாதபோதும்
என் குறிப்பறிந்திருக்கின்றன 
நீ
உள்ளே நுழைந்ததும்
காற்றில் தானாகவே மூடிக் கொள்ளும்
எனதறையின் ஜன்னல்கள்..

குறிப்பு 4 
எனதறையின் 
எல்லாப்  பொருட்களும்
உன் தொடுதலின்
சுகமறிந்தவை;
என்னைத் தவிர..

குறிப்பு 5 
உன் விரல்பட்டு 
கிழிவதற்கென
காத்திருக்கிறது
நாள்தோறும்
எனதறையின் நாள்காட்டி..

குறிப்பு 6 
நிரம்பி வழிகிறது
எனதறையின் குப்பைத் தொட்டி 
உனக்கென நான்
எழுதிக் கிழித்த கடிதங்களால்..

குறிப்பு 7 
நாணமுற்ற பல்லிகள்
காணக் கிடைக்கின்றன
எனதறையின் சுவர்களில்
அது அவைகளுக்கு
நீ
அறிமுகம் செய்தது..

குறிப்பு 8 
உனக்கெனவொரு
வாசமிருப்பதை
அறிவிக்கிறது எனதறை
நீ
வந்து போனபின்..






ஞாயிறு, 25 ஜூலை, 2010

நீயே..


.
.
பகற்பொழுதுகளில்
ஆர்த்தெழும் என் காமப் பறவையின்
பெருஞ்சிறகுகளை
வெட்டி வீழ்த்தி விடுகிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்..!

இன்னும் பெரிதாய்
பின் நீயே
அதன் சிறகுகளை
வளர்த்தெடுக்கவும் செய்கிறாய்
இரவுப் பொழுதுகளில்..!
.
.

சனி, 24 ஜூலை, 2010

எல்லா மரத்தடியிலும் புத்தன்..


.
.
வழக்கமாய்
தன் நிழலில் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவன்
குறித்துக் கவலையேதும் கொள்ளாமல்
நெடிதுயர்ந்து நிற்கிறது
ஊரோரத்து வேப்பமரம்..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
அது பக்குவப்பட்டிருந்தது..

தன்னில் வந்தமரும் பறவைகள்
தனக்கானதல்ல என்பதையும்
அது அறிந்தேயிருந்தது..

எல்லாத் திசைகளிலும் நீண்டிருந்த
கிளைக்கரங்களால்
அது தன் இறைவனைத் தேடிக்கொண்டிருக்கவில்லை..

தன் பெருநிழல் குறித்தான
பெருமித உணர்வில்
அதன் தலைக்கனமும் கூடியிருக்கவில்லை..

தன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
அது மறுப்பேதும் சொல்லவில்லை..

தன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
தன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
அது எதிர்ப்பேதும் காட்டவில்லை..

அது அதுவாகவேயிருந்தது-
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

அது அதுவாகவேயிருந்தது-
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

ஒரு மரம்
முதலில் தானேயிருக்கிறது ஒரு புத்தனாய்;
அதைக் கண்டடைந்தவன்
பின் தானுமாகிறான்  ஒரு புத்தனாய்..

புத்தன் அறிந்திருப்பான்
ஒரு மரம்
உலகின் மற்ற எல்லா மரங்களின்
மூலங்களையும் தன்னுள் கொண்டிருப்பதை..

புத்தனுக்குரியவை
போதி மரத்தடிகள் மட்டுமல்ல;
இந்த வேப்பமரத்தடியிலும்
உருவாகலாம் ஒரு நவீன புத்தன்..

இந்நேரம் ஒரு புத்தன் ஆகியிருக்கக்கூடும்
இவ்வேப்பமர நிழலில்
வழக்கமாய் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவனும்..

ஆயினும்
ஒரு புத்தன்
உலகிற்கு அறிவித்துக் கொள்வதில்லை
தன்னை புத்தனென்று..

உலகை அறிந்து கொள்கிறான் புத்தன்;
உலகமோ அறிந்து கொள்வதேயில்லை புத்தனை..!
.
.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

அடித்து நொறுக்கு..!

.
.
அடித்து நொறுக்கு..!
உன் ஆத்திரம் தீரும் மட்டும்...
ஈவிரக்கமற்ற
இக்கொடுஞ்சமூகத்தின்
இழிவுகளை..!
.
.

சனி, 10 ஜூலை, 2010

காலமும் என் கனவுகளும்..


.
.
கருணையற்று
நீள்கிறது காலம்
என் கனவுகளைத் தின்றபடி..

தவிரவும்
என் கனவுகளுக்குள்  அடங்காதவாறு
அது எல்லையற்றுமிருக்கிறது..

ஏதாவதொரு புள்ளியில்
காலம் என்னையோ காலத்தை நானோ
கடந்துவிடக் கூடும்..

அதன் பின்னும்
காலத்தால் தின்றழிக்கப்பட்ட
என் கனவுகள் முன்னெடுக்கப்படும்
என்னைத் தொடரும் எவனோ ஒருவனால்..

எனினும்
இன்னும் வீச்சுடன்
காலம் அப்போதும் காத்திருக்கும் 
கனவுகளைத் தின்பதற்கென..!
.
.

சனி, 3 ஜூலை, 2010

கொடும் இரவுகளும் பாழும் பகல்களும்..

.
.
நீயற்ற
ஏக்கத் தனிமையில்
நீளும் இரவுகள்
நிரம்பி வழிகின்றன
உன் கனவுகளால்..

நிலவு சுடும்
அக்கொடும் இரவுகள்
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை இயற்கை..

ஒருவேளை
அது அறிந்திருக்கக் கூடும்-
நீ மீண்டும் வந்த பின்
பாழும் பகல்கள்  வேண்டாமென்று
பரிந்துரைப்பேன் என்பதையும்..!
.
.

சொல்லத்தான் நினைக்கிறேன்..

.
.
நீ
முகம் காட்டும் போதெல்லாம்
உன்னை
எதிர் கொள்ளத் திராணியில்லாமல்
எப்போதும் உனக்கு
முதுகு காட்டியே நிற்கிறது
என் காதல்..!
.
.

சனி, 19 ஜூன், 2010

எங்கெங்கு காணினும்..

.
.
கலைந்து கலைந்து
உருவங்கள்
சிதைந்து கொண்டேயிருக்கும்
மேகக் கூட்டங்களிலும்
இப்போது
உன் முகம் மட்டுமே
தெரிகிறதெனக்கு..!
.
.

செவ்வாய், 15 ஜூன், 2010

கடவுளர்கள் ஓய்வெடுக்கிறார்கள்..


.

அது 'அரக்கி'யாகி
அனேக காலமாகிவிட்டதென்பதை
அறியாமல் இன்னமும்
நீதியை 'தேவதை' என்போரே..
இப்போதேனும்
அதன் கோர முகம் கண்டீரா..?

உங்கள்
வலிய சட்டங்களின்
இண்டு இடுக்குகளுக்குள்
அதன் 'தேவதை முகம்'
புதைக்கப்பட்டு விட்டதை
இப்போதேனும் உணர்ந்தீரா..?

இனி உங்கள்
முறையீடுகளோ வேண்டுதல்களோ
தொழுகைகளோ பிரார்த்தனைகளோ
எதுவுமே செவிமடுக்கப்படாமல் போகலாம்..

காரணம்
கலிகாலமென்பது
ஒருவேளை உங்கள் கடவுளர்கள்
ஓய்வெடுக்கும் காலமாய்
இருந்தாலுமிருக்கலாம்..!
.
.

வியாழன், 10 ஜூன், 2010

பறவைகளற்ற வானம்

.
.
எதிரெதிர்த் திசைகளில்
சாலையொன்றைக் கடக்க நேர்ந்தபோதுதான்
எங்களுக்குள் நிகழ்ந்தது
அந்த முதலும் கடைசியுமான சந்திப்பு..

விளங்க முடியாத
சில கவிதை வரிகளை விடவும்
ஆழமாய் இருந்தன
சாலையைக் கடந்த பின்னும்
என் மீது நீடித்திருந்த அவளின் பார்வைகள்..

திருவிழாக் கூட்டமொன்றில்
குழந்தையைப் போல
குதூகலித்திருந்தது என் மனம்..

வானத்தை நோக்கியபோது
அக்கணம் அது பறவைகளற்றிருந்தது..!
என்னை மட்டும்
பறக்க அழைத்ததாய்த் தோன்றியது..

சிறகுகளின்றிப்  பறந்த
அத்தருணத்தைப்  போலவே
இருக்கின்றன
வாழ்வின் சில தருணங்கள்
விவரிக்க முடியாதவைகளாய்..!
.
.

இது நிலவுக் கவிதையன்று..


எங்கே உன் கவிதைகள்
எனக் கேட்ட உனக்கு
தருவதற்கென்று தற்சமயம்
நீ விரும்பும் கவிதைகளெதுவும்
கைவசமில்லை என்னிடம்..

இப்போதெல்லாம்
இயலாமையின் ஆற்றாமையின்
இருள் கவிந்தேயிருக்கும் என் கவிதைகள்
ஒருபோதுமுனக்கு உவப்பளிக்கமாட்டா..

உடைக்கப்பட்ட
என் நிலவின் துண்டுகளை
தங்கள் வீதிகளில் கண்டெடுத்தவர்களை
சேகரித்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன்
என் முகவரிக்கு..

முழுவதும் வந்து சேர்ந்த பின்
ஒருவேளை
நானுனக்குப் பரிசளிக்கக் கூடும்
நீ விரும்பியதொரு
நிலவின் கவிதையை.


சனி, 22 மே, 2010

குறுங்கவிதைகள்

.
.
ஊர்த் திருவிழா

ரசித்துக் கொண்டிருக்கிறேன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை.
.
.

குறுங்கவிதைகள்

.
.
அமாவாசை இருட்டில்

தேடியும் கிடைக்கவில்லை

நிலவு.
.
.

உனக்குத் தெரியாது..


.
.

கடுஞ் சொற்களை வீசிவிட்டு
பின் 'வலித்திருக்குமோ'
என்றெண்ணி
வருந்திக் கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
ஒருபோதும்
எனக்கு வலிக்கச் செய்ய
உனக்குத் தெரியாதென்பது..!
.
.

பூவே..பெண்பூவே..



எல்லாப்
பூக்களை விடவும்
அழகானவளல்ல நீ..!

உன்னை விடவும்
அழகான பூக்கள்
இருக்கக் கூடும்..

ஒருவேளை
அவை இன்னும்
பரிணாமிக்காதவைகளாய்
இருக்கலாம்..!


ஞாயிறு, 16 மே, 2010

குறுங்கவிதைகள்

.
.
கடலைப்  போலவும்  இல்லை

மேகத்தைப் போலவும் இல்லை

மழை.
.
.

குறுங்கவிதைகள்

.
.
மழை பெய்து  கொண்டிருக்கிறது

கரையாமல் இருக்கிறது

வானவில்.
.
.

குறுங்கவிதைகள்

.
.
எதுவுமே தெரியவில்லை

எதைக் கண்டு பயம்

இருளில்.
.
.

குறுங்கவிதைகள்

.
.
துரத்திக் கொண்டிருக்கிறேன்

தொலைவில்  ஓடிக்கொண்டிருக்கிறது

வாழ்க்கை.
.
.

ஞாயிறு, 9 மே, 2010

பிரளய நாளொன்றில்..



பூமி
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது
பிரளய நாளொன்றில்..

பூமியின் மறு உயிர்ப்பாகவும்
இருக்கக்கூடும்
பிரளயமென்பது..

அது
உலகம் உறங்கி வழியும்
இரவின் அமைதியிலோ
உலகம் விரைந்து இயங்கும்
பகலின் பரபரப்பிலோ
நிகழக் கூடும்..

அந்நாளில் கோப்பைத் தேநீருடன்
நாளிதழில் முந்தைய நாள் நிகழ்வுகளை
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கக்கூடும்
நடக்கவிருக்கும் அபாயம் அறியாமல்..
அல்லது
சாலையை வெகுகவனமாய்க் கடந்து கொண்டிருக்கக்கூடும்
இனியும் கவனத்தில் கொள்வதற்கொன்றுமில்லை
என்பதறியாமல்..

உங்கள் பிள்ளைகள்
'ஒளிமயமான எதிர்காலம்' குறித்தான
தன்னம்பிக்கைக் கருத்தரங்கைச்
செவிமடுத்துக்  கொண்டிருக்கக்கூடும்
காலங்கள் முற்றுப் பெறப்போகும்
கதை தெரியாமல்..

உங்கள் வாழ்க்கைத்துணை
உங்களின் தவற்றை மன்னித்து விட்டதாய்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்
பாவங்கள் மட்டுமின்றி
புண்ணியங்களும் தண்டிக்கப்படப் போகும்
தீர்ப்பு நாள் வந்துவிட்டது தெரியாமல்..

அப்பிரளய முடிவில்
நோவாவின் கப்பலைப் போன்றொரு
விண்வெளிக் கப்பலில்
நீங்கள் பயணம் செய்யக்கூடும்..
அராரத் மலையைப் போன்றொரு
வேற்றுக்  கிரகம்
உங்களுக்குத் தஞ்சமளிக்கவும் கூடும்..

எந்த ஒரு கணத்திலும்
பிரளயம் நிகழ்ந்து விடுவதற்கான
வாய்ப்புகள் இருக்கவே செய்தாலும்
மறு பரிணாமத்திற்கெனத் தெரிந்தெடுக்கப்படும் உயிர்களில்
நீங்களும் ஒருவராய் இருப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும்
இல்லாமலே  போகக்கூடும்..!



நிலவில் தொலைந்தவன்


.
.
நிலவுக்குத் தெரியாது
எத்தனையாவது
நிலவுக் கவிதை இதுவென்பது..

கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்
காலம் காலமாய்
அது காத்துக் கொண்டேயிருக்கிறது
குழந்தைகளுக்காக;
இன்னமும் மரணித்து விடாத
வடை சுடும் பாட்டியோடு..

முழு நிலவின் இரவுகளிலோ
குறைநிலவின் இரவுகளிலோ
தொடர்ந்து நிலவில்
தொலைந்த வண்ணமிருக்கிறார்கள்
கவிஞர்கள்
தங்கள் கவிதைகளைத் தேடி..

அதிக வெளிச்சமுமில்லாத
அதிக இருளுமில்லாத
நிலவின் இரவுகள்
அழகானவையென்று
அதிசயிக்கிறார்கள் கவிஞர்கள்..
அவற்றை விடவும் அழகானவை என்பேன்
நிலவற்ற இருட்டு இரவுகளை..

மனித வன்மங்களும் அசிங்கங்களும்
இருட்டுப் போர்வைக்குள்
தங்கள் முகங்களைப் புதைத்துக் கொள்வதால்
நானும் கூட
நிலவில் தொலைந்து போகிறேன்-
நிலவற்ற அமாவாசை இரவுகளில்..!
.
.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஒரே வானம் இரு பார்வைகள்



.
மெதுவாய்க்
கழிக்கப்படுகின்றன
வாரத்தின் ஐந்து நாட்கள்
சென்னை மாநகரில்..

நெரிசலான போக்குவரத்து..
உயரமான கட்டிடங்கள்..
எந்திர மயமான மனிதர்கள்..

அண்ணாந்து பார்க்கிறேன்
வானம் குறுகலாய்த் தெரிகிறது..

விரைந்து கழிகின்றன
வார இறுதி நாட்கள்
சொந்த ஊரில்..

மிதமான போக்குவரத்து..
சின்னஞ்சிறு வீடுகள்..
அசலான மனிதர்கள்..

அண்ணாந்து பார்க்கிறேன்
வானம் இப்போது
விசாலமாய்த் தெரிகிறது..
.
.
.

வாழ்க்கைக் கோலம்



.
.
எப்போதும் போல்
வெள்ளைக் கோலமா?
இல்லை
மார்கழி மாதத்து
வண்ணக் கோலமா?

இத்தனை
காலம் கடந்தும்
பிடிபடவேயில்லை வாழ்க்கை..

எதுவானாலும் என்ன?
கலைந்து போவதுதானே கோலம்...
.
.

சனி, 24 ஏப்ரல், 2010

சிலந்தி வீடுகள்



.
என் வீட்டைப் போலவே
எப்போதும் அழகானவை
உன் வீடுகள்..

ஆனாலும்
அறுத்தெறிகிறேன்
உன் வீடுகளை..

ஒருபோதும் அழகில்லை
என் வீட்டில்
உன் வீடுகள்..
.
.

குழந்தையின் நிலா



 .
ஒருநாள்
நிலா  கேட்டது
நண்பனின் குழந்தை..
வானத்தில் காட்டினேன்
சிரித்துப் போனது..

அடுத்த நாள் என்னிடம்
அது தன் காலால்
நசுக்கிக் காட்டியது
தெருவோரம் தேங்கியிருந்த
மழைநீரில்
நிலாவை..
.
.

சிக்கன் பிரியாணியும் ஜீவகாருண்யமும்




.
சிக்கன் பிரியாணி
வாசத்தைப் போலவே
எப்போதும் என்னை (எல்லோரையும்)
வசீகரிப்பதாய் இருக்கிறது
ஜீவகாருண்யம்..

ஆனாலும்
இன்னும் எனக்கு சாத்தியப்படவில்லை
சிக்கன் பிரியாணியைக் கைவிடுவது

இப்போதெல்லாம்
சிக்கன் பிரியாணியின்
சுவை குறைந்தேயிருக்கிறது
குற்ற உணர்வு கூடியிருப்பதால்..

குளியலறைத் தண்ணீரில்
அடித்துச் செல்லப்படாமல்
கைதூக்கி விடப்பட்ட எறும்புகளோ
கடித்தாலும் அடிக்காமல்
துரத்தி விடப்பட்ட கொசுக்களோ
அல்லது
இரவில் பொறியில் சிக்கி
காலையில் கொல்லப்படாமல்
வெளியேற்றப்பட்ட எலிகளோ
எவ்வளவு இருக்குமென்று
கணக்கு எதுவும் வைக்கவில்லை ..

நிச்சயமாக எப்போதும்
இதைவிடக் கூடுதலாகவே
இருக்கிறது
என் பிரியாணிக்காகக் கொல்லப்படும்
கோழிகளின் எண்ணிக்கை..

எனக்காகக் கொல்லாமல் விடப்பட்ட
கோழிகள்  இவையென்று
எதையும் என்னால்
அடையாளம் காண முடியாவிட்டாலும் கூட
எதிர்காலத்தில்
என்றாவது ஒருநாள்
எனக்கும் சாத்தியப்படலாம்
சிக்கன் பிரியாணியைக் கைவிடுவது..

ஆனாலும்
சிக்கன் பிரியாணியைக் கைவிட வேண்டிய
அவசியம் எதுவுமில்லை உங்களுக்கு
சலிப்புத் தட்டும்வரை..

சலிப்புத் தட்டியபின்
சிக்கன் பிரியாணியைக் கைவிட்டபின்
யாரேனும் ஒருநாள் காரணம் கேட்டால்
சலித்து விட்டதாய்ச் சொல்லாதீர்கள்..
பௌத்தமோ  ஜைனமோ
உங்களை ஆட்கொண்டு  விட்டதாகவோ
ஜீவகாருண்யம்
உங்களைக் கவர்ந்து விட்டதாகவோ
சொல்லுங்கள்..
சமூகம் சற்று மேலதிகமாய்
உங்களை கவனிக்கக் கூடும்..

காரணம்
எதுவாயிருந்தால் என்ன?
கொல்லப்படுவதற்கென்றே
வளர்க்கப்படும்
சில கோழிகள் காப்பாற்றப்படுவதே
கடைசியில் நோக்கமாய் இருக்கட்டும்..

(கோழிகள் மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் நேசிப்போம்..

கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிர்களும் தொழும்
                                                     -திருவள்ளுவர் )
.
.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பதில்களற்ற கேள்விகள்

கேள்விகளே
மீண்டும் மீண்டும்
பரிமாறப்படுகின்றன
பதில்களுக்காய்ப்
பசித்திருக்கும் வேளைகளில்..

ஒரு புதிருக்கும்
இன்னொரு புதிருக்கும்
இடையே
அவகாசங்களாய்த் தரப்படுகின்றன
இன்னும் சில புதிர்கள்..

'அடைதல்'
இல்லாத பயணங்கள்
எப்போதும் முடிகின்றன
எதிர்த் திசைகளில்..

விடுதலை வேண்டியவர்களுக்காய்
விரல் நீட்டப்பட்ட திசைகளில்
இன்னும் பெரிதாய்க்
காத்திருக்கின்றன
வேறு சிறைகள்..

அன்றாட
ஒத்திகைகளினூடாக
விரைந்து கழிகின்றன நாட்கள்
நெடியதொரு தூக்கத்தை நோக்கி..

இன்னும்
இருக்கவே செய்கின்றன
இருட்டு மூலைகள்
தத்துவ வெளிச்சங்களால்
தீண்டப்படாமல்..

இறுதியில்
கேள்வியற்றதாகிறது
வாழ்க்கை
அதற்கான விடை
அதுவே என்பதை
அறிந்து அடங்கும்போது..

வாழ்க்கையைத் தவிர்த்தும்
வாழ்க்கைக்கு வெளியேயும்
எப்போதும் இருப்பதில்லை
இன்னொரு  வாழ்க்கை..!
.
.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

காவல் தெய்வங்கள்



வீட்டு நாய்களைப் போலில்லை
தெருநாய்கள்;
அதிகம் நம்மால்  விரும்பப்படுவதில்லை
அவை.

அழைப்பதற்கென
பெயரெதுவும் இருப்பதில்லை
அவற்றுக்கு..
ஒரு வாய் சமிக்ஞை
போதுமானதாயிருக்கிறது
உங்கள் குறிப்பறிவதற்கு..

உயர் வகை உணவுகள்
எதுவும் தேவைப்படுவதேயில்லை
தெரு நாய்களுக்கு..
எஞ்சியவைகளும் 
குப்பையில் வீசப்படுபவைகளுமே
நிறைவாய் இருக்கின்றன அவற்றுக்கு..

தவறாமல் இரவில்
தத்தம் தெருக்களின் காவலுக்குத்
திரும்பி விடுகின்றன தெரு நாய்கள்
நீண்ட பகல் நேரத் திரிதலுக்குப் பின்னர்..

யாரும் கேட்காமலே
தெருக்களைக் காவல் புரியும்
காரணம் எதுவும் தெரிவதில்லை நமக்கு..
ஒருவேளை
காவல் தெய்வங்களின் கதைகளைப் போல
மரபு வழிக் கதைகள் எதுவும்
இடையில் மறக்கப்பட்டிருக்கலாம்
நம்மால்..

சிறுவர்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது தெரு நாய்களுக்கு;
எப்போதும்
தெருக்களின் அடையாளங்களாய் இருக்கிறார்கள்
சிறுவர்களும் தெரு நாய்களும்..

எல்லாத் தெருக்களிலும்
உங்களால் காண முடியும்
கணிசமான அளவில் காயப்படுத்தப்பட்ட
கால் உடைக்கப்பட்ட தெரு நாய்களை..

ஆனாலும்
நம்மைப் போலில்லை தெரு நாய்கள்;
அவை மனிதர்களை
ஒருபோதும் புறக்கணிப்பதுமில்லை;
கலவியின் போது கல்லெறிவதுமில்லை.


சனி, 10 ஏப்ரல், 2010

சாயல்



வேண்டுமென்றே
இருட்டடிப்பு செய்வதற்காய்
வெகு கவனமாய்த்
திட்டமிடுகிறேன்.
பொறுக்கியெடுக்கப்பட்ட
சொற்களைக் கையாள்கிறேன்.
ஆனாலும்
தோற்றுப் போகிறேன்.

எப்போதும்
என் கவிதைகளில்
இருக்கவே செய்கிறது;
சற்றேனும்
உன் நினைவுகளின்
சாயல்.



'நான்'களின் உரையாடல்



ஏதோ ஒன்றை
உனக்குச் சொல்வதற்கெனத்
தொடங்கப்படுவதில்லை
எனது உரையாடல்.

ஆனாலும் எனக்கு
அவசியமாயிருக்கிறது
உன்னோடு உரையாடுவது.

சுவாரஸ்யம் ஏதுமின்றித்
தொடங்கி முடிகிறது
எனது உரையாடல்
முன்கூட்டியே அதன் உள்ளடக்கம்
உன்னால் அறியப்பட்டிருப்பதால்..

பின்
நீயும் என்னோடு
உரையாடத் தொடங்குகிறாய்
எனது இன்னொரு குரலில்..

எனது நியாயங்கள் உன்னாலும்
உனது நியாயங்கள் என்னாலும்
மீறப்படுவது குறித்து பரஸ்பரம்
கேள்விகள் எழுப்பிக் கொள்கிறோம்
நமது உரையாடலின் நடுவே..

நீ சில காரியங்களை
என்னை மீறிச் செய்ததற்காய்
நானும்
நான் சில காரியங்களை
உன்னை  மீறிச் செய்ததற்காய்
நீயும் ஒருவருக்கொருவர்
கண்டனங்களைப் பரிமாறிக் கொள்கிறோம்;
அண்டை நாடுகளின்
சம்பிரதாயங்களைப் போல..

பழைய நியாயங்கள் சாகடிக்கப்படுவதும்
புதிய நியாயங்கள் கட்டமைக்கப்படுவதும்
நிகழ்கிறது
நமது உரையாடலின் முடிவில்..

'நீ' யாரென்று
யாரேனும் வினவினால்
உன்னைத் தவிர்த்து
எனக்கு மட்டுமே தெரிந்த
அந்த உண்மையைச் சொல்வேன்;
'நீ'
இன்னொரு நானென்று..



ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

சொல்லப்படாதது..



'நான் உன்னை விட்டு
விலகப்போவதில்லை'
என உன் விழிகள் சொன்னாலும்
உதடுகள் ஏதும் சொல்லாதபோது
நான் என்ன செய்வது..?


முக்கோணம்

.
.
சரியான நேரத்தில்
எழுப்புகிறது 'அலாரம்'..

முன்னமேயே
விழித்துக் கொண்டது 'மனம்'..

இன்னும் போர்வையை விட்டு
விலக மறுக்கிறது 'உடல்'..
.
.

ஒழுங்கும் அலங்கோலமும்..



சுத்தம் செய்யப்பட்ட
செவ்வக அறை..
வெளிச்சம் உமிழும்
குழல் விளக்கு..
வட்டமாய்ச் சுழலும்
மின்விசிறி..
சரியான தேதி காட்டும்
நாள்காட்டி..
சீராய் அசையும்
கடிகாரப் பெண்டுலம்..
மடித்து வைக்கப்பட்ட
ஆடைகள்..
அடுக்கி வைக்கப்பட்ட
புத்தகங்கள்..
ஒழுங்காய் விரிக்கப்பட்ட   
படுக்கையில்
நான் மட்டும் அலங்கோலமாய்..
.
.

ஏக்கம்


 
ஒரு நிராகரிப்பில்தான்
தொடங்கியது என் காதல்..
ஆம்..!
என் மீதான உன் காதலை
நான் நிராகரித்த போதுதான்
உன் மீதான
என் காதல் தொடங்கியது..

முடிவு தெரியாத
இந்த பயணத்தில்
முடிந்து போனது
உன் காதல்..
முடிவற்று நீள்கிறது
என் ஏக்கம்..!
.
.

சனி, 27 மார்ச், 2010

காற்றுக்கு வாசமில்லை..




காற்றுக்கென்று
வாசம் எதுவும் இருப்பதில்லை
பிரத்யேகமாய்..

மழை வாசம் முதல்
மண் வாசம் வரை
மலர் வாசம் முதல்
மரண வாசம் வரை
வேறு வேறு வாசங்களைச்
சுமந்து வருகிறது காற்று;
வேறு வேறு சந்தர்ப்பங்களில்.

காற்றுக்குத் தெரிந்திருக்கிறது
வாசங்களைக் கொண்டு
மனிதர்களை வகைப்படுத்த.
குழந்தையொன்றை
தாய்ப்பாலின் வாசம் கொண்டும்
உழைப்பாளியை
அழுக்கு வியர்வை
வாசங்களைக் கொண்டும்
இன்னும் சிலரை
செயற்கைப் பூச்சுகளின்
வாசங்களைக் கொண்டும்.

கூடுதலாய்
பசி கண்ணீர்
இவற்றின் வாசங்களும்
தெரிந்திருக்கலாம் காற்றுக்கு;
அது யாருடையதாய் இருந்த போதிலும்.

பூமியின் எல்லா வாசங்களையும்
சுமந்து வருகிறது காற்று;
விருப்பு வெறுப்பற்ற
ஒரு ஞானியைப் போல.

என்றாலும்
காற்றுக்கும் இப்போது மூச்சுத் திணறல்;
மெல்ல மெல்ல
பூமி கருகும் வாசத்தில்.

விரைவில்
பூமி ஒருநாள்
கைவிடப்படலாம் நிரந்தரமாய்;
காற்றாலும் அதன் வாசங்களாலும்.



திங்கள், 15 மார்ச், 2010

ஜீவ நதி



அணை கட்டித்
தேக்கி வைக்கத் தேவையில்லாத
வற்றாத ஜீவ நதி
உன் நினைவுகள்.

அவை
நெடுந்தூரப் பயணங்களில்
என்னோடு சேர்ந்து பயணிக்கின்றன;
கடலோரக் கால் நனைப்புகளில்
என்னோடு சேர்ந்து நனைகின்றன;
மாலை நேர உலாவல்களில்
என்னோடு சேர்ந்து உலாவுகின்றன.

ஈமச் சடங்கொன்றினிடையே
மழிக்கப்படும்
தலை மயிர் போன்றதல்ல
உன் நினைவுகள்;
அவை
பத்திரப்படுத்தப்பட்ட
பழைய நாட்குறிப்பேடொன்றின் 
பக்கங்களில் உறங்கும்
எழுத்துகளைப் போன்றவை..!



ஞாயிறு, 14 மார்ச், 2010

நம் பயணங்கள்




வேறு வேறு புள்ளிகளில்
தொடங்கின நம் பயணங்கள்.

இடையில் ஒருமுறை
சந்தித்துக் கொண்டோம்.
சந்திப்பின் முகவரி
எதுவென்று விளங்கவில்லை.

காதலோ என்று சிலசமயம்
நான் குழம்பியதுண்டு.
இறுதிவரை அதை நீ
உறுதி செய்யவுமில்லை;
இல்லையென்று மறுக்கவுமில்லை.

மீண்டும் தொடர்கின்றன
நம் பயணங்கள்;
அதனதன் பாதைகளில்..

முந்தைய சந்திப்பின்
சம்பவங்களை மெல்ல
அசைபோட்டபடி
மெதுவாய்க் கேட்கிறது மனம்,
'மீண்டும் ஒரு சந்திப்பு
எப்போது நிகழும்?'



நீ தெரியாத சன்னல்கள்..




புதிதாய்க் குடிபோன வீட்டில்
நிறைய சன்னல்கள்.
ஒருபோதும்
அவற்றை நான் திறப்பதேயில்லை;
இனி
எந்த சன்னல் வழியாகவும்
நீ
தெரியப்போவதில்லை என்பதால்..!


உனக்கான கவிதைகள்







நான் இன்னும்
எழுதவேயில்லை
எனக்குள் தோன்றும்
உனக்கான கவிதைகளை..!
.
.

நானும் நட்சத்திரங்களும்..


















ஒவ்வொரு முறையும்
எண்ணி முடிப்பதற்குள்
விடிந்து விடுகின்றன
என் இரவுகள்..!
.
.
.

ஞாயிறு, 7 மார்ச், 2010

புத்தரின் மரச்சிற்பம்




ஒரு மரத்தின் மரிப்பில்
உனதுயிர்ப்பு..
நீயோ
உயிர்க்கொலைக்கு எதிர்ப்பு.

செதுக்கலின் நுணுக்கங்களில்
வியந்தே உன்னை வாங்கினேன்..
இன்று உன் மோனத்தில்
என்னை நானே செதுக்கிக் கொள்கிறேன்.

உடன்பாடில்லைதான்
உருவ வழிபாட்டில் என்றாலும்
ஒப்புக்கொள்கிறேன் வெட்கத்தோடு
உன்னை மட்டும் வணங்கத் தோன்றுவதை..

மார்கழி மாதத்து நாய்களாய்
அலையுமென் மனம்
உன்னைக் கண்டால்
ஒடுங்கிப் போகிறது
ஓட்டுக்குள் ஆமையாய்..

'மாற்றங்கள் மட்டுமே மாறுதலற்றவை'
என்றாய்;
மாறிப்போனேன் நானும்
மாறுபாடு ஏதுமின்றி..

உன் வினைக்கோட்பாட்டை
மாற்றங்களுடன்
ஏற்றுக் கொள்கிறது,
உன் சூனிய வாதத்தோடு
உடன்பட மறுக்கும்
என் பொருள் முதல்வாத அறிவு.

உன்னோடு நான் நிகழ்த்தும்
மௌன உரையாடல்களில்
எப்போதும் எஞ்சி நிற்கின்றன
விடை தெரியாத
என் கேள்விகள்.

உன் பாதையில் பயணப்படத்தான்
எத்தனிக்கிறது மனம்.
ஆனாலும்,
தன் கோரக் கைகளை நீட்டி
அவ்வப்போது பற்றி இழுக்கிறது
வாழ்க்கை.


Twitter Bird Gadget