வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..5


கவிதை எழுதுவதைக்
கைவிடுவதெனத் தீர்மானித்தும்
இன்னும் விட்டபாடில்லை..

பின்பு
அது குறித்தும்
கவிதை புனைந்தாயிற்று..
.
.

சனி, 21 ஜனவரி, 2012

பொம்மை உடைக்கும் குழந்தைகள்


சில காகிதங்களோ
கொஞ்சம் களிமண்ணோ போதும்
நீங்கள் ஒரு பொம்மை செய்ய..

உங்கள் கற்பனைக்கேற்றவாறு
பொம்மை செய்து முடித்தபின்
பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள்
முதல் குழந்தைக்கு தகப்பனானதைப் போல..

இப்போது பொம்மையை
உங்கள் குழந்தைக்கு
விளையாடத் தருகிறீர்கள் அதே மகிழ்ச்சியுடன்..
குழந்தையும் பெருமகிழ்ச்சி கொள்கிறது
பொம்மையோடு விளையாடி
அதை உடைத்தபின்..

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி
ஒவ்வொன்றில் இருக்கக்கூடும்;
உங்களுக்கு பொம்மை செய்வதிலும்
உங்கள் குழந்தைக்கு பொம்மையை உடைப்பதிலும்
இருப்பதைப் போல..
.
.

புதன், 18 ஜனவரி, 2012

புயல் : ஒரு ஏழையின் சில கேள்விகள்


கேள்வி 1:
ஏழைகளின்
கூரைகளைப் பிய்த்தெறிந்த
இந்தப் புயலை அனுப்பிய
பெருமுதலாளி யார்?
கடவுளா?

கேள்வி 2:
வாயு
பகவானா?
அரக்கனா?

கேள்வி 3:
புயல் உருவாகுமிடம்
கடலா?
நரகமா?

கேள்வி 4:
நாங்கள்
பாவிகளாக இருக்கலாம்..
இந்த மரங்களும்
பறவைகளும்
என்ன பாவம் செய்திருக்கக் கூடும்?

கேள்வி 5:
குடிசைகள் இல்லாத
உலகம் படைக்க
இப்படி ஒரு குறுக்கு வழியா?

கேள்வி 6:
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணும் நீங்கள்
எங்கள் அழுகையில்
எதைக் கண்டு கொள்வீர்கள்?
.
.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

குறுங்கவிதைகள்


1.சிறகசைத்து மேலெழும்பும் பறவைகள்
பின் வீழ்கின்றன
சில இறகுகள்.

2.பெய்யும் மழை
நனைந்து கொண்டிருக்கிறது
வறண்ட ஆறு.

3.கொள்ளை அழகு
எப்படி அழைப்பேன்?
பெயர் தெரியாத பூ.
.
.

திங்கள், 16 ஜனவரி, 2012

முகவரியற்ற துயரம்



யாரோ யாருக்கோ
எழுதிய இக்கடிதத்தை
என் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது
கடந்து போன வன்புயல்

மழையில் நனைந்திருக்கும் அது
கொஞ்சம் சேற்றையும்
நிறைய துயரத்தையும் சுமந்தபடி
என் கைகளில் கனத்துக் கொண்டிருக்கிறது

முகம் தெரியாத 
எவனோ ஒருவனின் வலிகளை 
வரிகளாய்க் கொண்டிருக்கும் அது
அவனது
வறுமை
இயலாமை
ஆற்றாமை என
துயரத்தின் பல பரிமாணங்களை
அடுக்கிக் கொண்டே செல்கிறது

பகிர்வதன் மூலம்
பெருந்துயரத்தைப் பாதியாக்கவே
எத்தனிக்கும் அது
எழுதப்பட்டவனிடம் எதையும்
யாசிக்கவுமில்லை; மண்டியிடவுமில்லை

புயல் விட்டுச் சென்ற சிதிலங்களின் நடுவே
நிராதரவாய் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில்
என் கைகள் பற்றியிருக்கும் இக்கடிதத்தால்
இச்சூழலின் துயரம் 
ஒரு காட்டாறென
மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது..
.
.

Twitter Bird Gadget