வீடுகளால் நிரம்பி வழியும்
கனவுகளுக்குச் சொந்தக்காரன் அவன்
வீடுகளைத் தவிர வேறெதையும்
அவன் கனவு காண்பதேயில்லை
அவன் கனவில் வரும் வீடுகள்
நகரத்து மாடி வீடுகளைப் போலவே
யாரும் எளிதில் அணுகமுடியாதவாறு
இரும்புக் கதவுகளோடும் குறைந்த வெளிச்சத்தோடும்
அமானுஷ்யமாய் இருக்கின்றன
மழையும் வெயிலுங்கூட
அவற்றின் ரகசியங்களை அறியமுடியாதவாறு
இறுகச் சாத்தப்பட்டிருக்கும் அவ்வீடுகளைக்
கதவுகளிடமிருந்தும் சாளரங்களிடமிருந்தும்
அவன் விடுவிக்கிறான்
எல்லா அறைகளும் படுக்கையறைகளாகவே
இருக்கும் அவ்வீடுகளில்
அவனோடு படுத்துறங்குவோர் யாவரையும்
அவன் முன்பே அறிந்திருக்கிறான்
கனவில் ஒருநாள் திடீரென மழைபெய்ய
அவன் வேறுவழியில்லாமல்
கதவுகளாலும் சாளரங்களாலும்
மழையின் முகத்தில் ஓங்கி அறைகிறான்
அதிர்ச்சியில் கனவிலிருந்து வெளியேறிய மழை
யதார்த்தத்தில் நுழைய
திடுக்கிட்டுக் கண்விழித்தவன்
தன் கனவை வாரிச் சுருட்டிக் கொண்டு
ஓரிடம் தேடி ஒதுங்குகிறான்
கனவு வீடுகளில் அவனோடு
படுத்துறங்கியோர் யாவரும்
பக்கத்தில் ஒதுங்கியிருக்க
அவர்கள் அவனைக் கண்டு
புன்முறுவல் பூக்கிறார்கள்
நேரந்தெரியாத அந்த இரவில்
விடாமல் பெய்து கொண்டிருந்த மழையில்
அந்தச் சாலையோர சிறுவனின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாய்
நமுக்கத் தொடங்குகிறது