சனி, 10 செப்டம்பர், 2011

குறுங்கவிதைகள்


.
1. அமாவாசை இருட்டு
    எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 
    மின்மினிப் பூச்சிகள்.

2. பெருமழைக்கு அச்சாரம்
    இச்சிறு தூறலே போதும்
    மண்வாசம்.

3. எப்போது இறங்கியதெனத்  தெரியவில்லை
    நீராடிக் கொண்டிருக்கிறது
    குளத்தில் நிலா.  

4. ஆடைகள் அர்த்தமற்றவை
    அவிழ்த்தெறிகிறேன்
    இளவேனிற்கால நண்பகல்.

5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
    மேலும் மேலும் அணிகிறேன் 
    முன்பனிக்கால இரவு.

6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
    வேடிக்கை பார்க்கிறது வெளியே 
    நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.

7. அழகுப் பெண் 
    அருகில் அழகுக் குழந்தை
    தொலைந்த காமம்.

8. ஊற்றெடுக்கும் கவிதை
    எழுதியே ஆக வேண்டும்  
    மை தீர்ந்த பேனா.

9. ஓய்வைத் தேடும் கால்கள்
    சோராதிருக்கிறது மனம்
    இன்னும் முடியாத பயணம்.
.
.

சனி, 3 செப்டம்பர், 2011

புத்தாயுதம் - வீழ்த்தப்பட்டவனின் அல்லது சரணடைந்தவனின் ஒப்புதல் வாக்குமுலம்




ஒன்று:
கொஞ்ச காலம்
உன்னைத் தொடர்ந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
உன்னைத் தொடரவேயில்லை என்பதை..  

இரண்டு:
நானெப்படி
உன்னைத் தொடர்வேன்
நீயே விரும்பாதபோது..

மூன்று:
நிறைய மாறிவிட்டேனென்று
எல்லோரும் சொல்லும்போது 
நினைத்துக் கொள்கிறேன் 
உன்னை..

நான்கு:
நீ நிரம்பிய பின்தான் 
காலியானது
என் குடுவை..

ஐந்து:
உன் பிடிக்குள்
சிக்கிய பின்தான் 
தளர்ந்தது என் பிடி..

ஆறு:
எல்லாவற்றையும் பற்றியிருந்தேன்
சுமையாய் இருந்தது;
உன்னைப் பற்றினேன் 
இலேசாயிருக்கிறது..

ஏழு:
எங்கேயோ சிக்கிவிட்டேன்
என்கிறார்கள்;
இப்போதுதான் சுதந்திரமாயிருப்பதை
எப்படிச் சொல்வது..?

எட்டு:
எதிலேயோ வீழ்ந்து விட்டேன் 
என்கிறார்கள்;
எனது எழுச்சியை
எப்படிப் பறைசாற்றுவது..? 

ஒன்பது: 
பத்தாது ஆயுதம் என்றார்கள்;
புத்தாயுதம் இருக்கிறது என்றேன்
புது ஆயுதமா என்றார்கள்;
புத்த ஆயுதம் என்றேன்..!
.
.
Twitter Bird Gadget