ஞாயிறு, 15 ஜூலை, 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..2


5.
மரவட்டையே!
கணக்கற்ற
உன் எளிய கால்களால்
யுகங்களைக் கடந்து வந்திருக்கிறாய்..

நீ
என் மூதாதைகளின் மூதாதை..
நான்
உன்னை வணங்குகிறேன்.

6.
எனக்கெனவொரு நிழலை
வனைந்து தருகிறான்
கதிரவன்..
அது என்னைப் போல
இருப்பதேயில்லை..
சமயங்களில்
அதைப் போலவும்
அது இருப்பதில்லை.

7.
பெருமலையே!
நான் உன் காலடிகளில்
வீழ்ந்து கிடக்கிறேன்..
திகைப்பூண்டை மிதித்தவனாய்
உன்னைச் சுற்றி சுற்றி வருகிறேன்..

நீ
எங்கள் நகரத்தின்
கட்டடங்களைப் போல
சீர்மையாகவும் செம்மையாகவும் இல்லை..
எனினும்
உன் ஒழுங்கின்மைதான்
எத்தனை அழகு!
நானுன்
பிரம்மாண்டத்தின் முன்
மண்டியிட்டுப் பணிகிறேன்.

8.
தருவே!
உன் பெருநிழல் குறித்த
பெருமித உணர்வில்
உன் தலைக்கனம் கூடியிருக்கவில்லை..
எல்லாத் திசைகளிலும் நீண்டிருக்கும்
எண்ணற்ற கிளைக்கரங்களால்
நீ உன் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கவில்லை..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
நீ பக்குவப்பட்டிருக்கிறாய்..

உன்னில் வந்தமரும் பறவைகள்
உனக்கானவையல்ல என்பதையும்
நீ அறிந்தேயிருக்கிறாய்..

உன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
நீ மறுப்பேதும் சொல்வதில்லை..

உன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
உன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
நீ எதிர்ப்பேதும் காட்டுவதில்லை..

நீ நீயாகவே இருக்கிறாய்
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

நீ நீயாகவே இருக்கிறாய்
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

குளிர் தருவே!
நீயே புத்தன்;
நான் உன்னைச் சரணடைகிறேன்.



சனி, 14 ஜூலை, 2012

அறமே கொல்லும்



நல்லேர் உழவர்யாம் நடுக்குற் றலைவதே
சொல்லேர் உழவர்தம் சொல்லி லடங்குமோ?
அறம்பாடிக் கொல்லும் திறமேது மில்லை
அறமே கொல்லும் ஒருநாளி லும்மை




உழவர்களைக் கொலை செய்தல்



வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

மென்னியை முறிக்காமல்,
முதுகெலும்பை நொறுக்காமல்,
குருதி பார்க்காமல்,
வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

தேவைக்கதிகமாய் நீங்கள் வாங்கிக் குவிக்கும்
நிலங்களின் கீழே புதைக்கப்பட்டிருக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின் உடல்கள் சில..

மினரல் வாட்டர் போத்தல்களை
வாயில் கவிழ்க்கும் வேளைகளில்
உங்கள் நாவுகள் சுவைக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
குருதியை, கண்ணீரை, வியர்வையை..

தொழிற்சாலைகளின் ஓரம்
நெருங்க நேர்ந்தால்
வெளிவரும் புகையில், கழிவுகளில்
உங்கள் நாசிகள் உணரக்கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
உடல்கள் கருகும் வீச்சத்தை..

இப்படியாகவும், இன்னும் வேறு வழிகளிலும்
வெகுசுல‌பமாகவே இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

ஆயினும்
இந்தக் கொலைகள் குறித்து
நீங்கள் விசாரிக்கப்படவோ
தண்டிக்கப்படவோ போவதில்லை..
குறைந்தபட்சம்
நீங்கள் குற்ற உணர்வுறவோ
கவலையுறவோ தேவையில்லை..

காரணம்
உழவர்களின் கொலைகள் யாவும்
தற்கொலைகள் என்றே
ஒருமனதாய்ப் புனைந்து வைக்கப்படும்.




இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..1


1.
பெய்யும் மழையில்
பேனாவை நிரப்பிக் கொண்டு
எழுதத் தொடங்குகிறேன்
வானம்பாடியின்
பாடலொன்றை..

2.
இரவின் அடர்பனியில்
உறைந்து கிடந்த
எனது சொற்கள்
வெயிலவிழ்ந்த விடியலில்
வெடித்துக் கிளம்புகின்றன..

இனி
அவை எதைப் பேசக்கூடும்?
இரவின் அடர்பனியையா?
இளங்காலை வெயிலையா?

3.
பெருநிழல்கள் குறுகுமோர்
உச்சி வெயிற் பொழுதில்
முடிவற்ற துயரமென நீண்டிருக்கும்
யாருமற்ற தார்ச்சாலை மீது
அலை அலையாய் அந்தரத்தில்
நர்த்தனமிடுகிறது கானல்..

எட்டியெட்டித் தொடினும்
கிட்டாதெனத் தெரிந்தும்
துரத்தித் துரத்திக் குதூகலிக்கிறேன்..

கானலின் நடனத்திற்கு
நானொரு தப்புத்தாளம்.

4.
காலை முதல் மாலை வரை
தன் நிறங்களைக் கொண்டு
பூமியை நேர்த்தி செய்யும்
கதிரவன்
மாலையில்
மலைக்குத் திரும்புகிறான்
சோர்வோடும்
எக்கச்சக்கமாய் எஞ்சிவிட்ட
சிவப்பு நிறத்தோடும்..



Twitter Bird Gadget