ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தனிமைக்காலங்கள்-2


1.
கண்களாலும் காதுகளாலும்
செய்யப்பட்ட சுவர்களின் நடுவே
நம்பிக் கொண்டிருக்கிறேன்
தனித்திருப்பதாய்..

2.
தனிமை
புத்தனெனில்
நான்
தனித்திருக்கவில்லை.

3.
எரிக்கப்பட்ட
பாம்பு மாத்திரையெனக்
கருகிக் கொண்டிருக்கிறேன்..
அதன் கருப்பு சாம்பலெனப்
பெருகிக் கொண்டேயிருக்கிறது
தனிமையின் துயரம்.

(பாம்பு மாத்திரை: தீபாவளியின் போது சிறுவர்கள் கொளுத்தி மகிழும் ஒருவகைப் பட்டாசு)

4.
நனைவதற்கு யாருமற்ற
நள்ளிரவு மழையின்
துயரத்தைப் பாடிக்கொண்டிருக்கிறேன்..
வாஞ்சையுடன்
சாளரம் வழியே
சாரலாய் எனை நனைத்து
என் தனிமையழிக்கிறது
மாமழை.

5.
காயசண்டிகையின் பசியென
வாட்டுகிறதென் தனிமை..
மணிமேகலையைத்
தேடியலைகிறேன்
நான்.

6.
இலைகளுதிர்ந்த
மொட்டை மரமென
நிற்கிறேன்..
அம்மரத்தடி சருகுகளெனச்
சலசலத்துக் கொண்டேயிருக்கிறது
தனிமைத்துயர்.

7.
விலக்கப்பட்ட கனியொரு பக்கம்
புத்தன் மறு பக்கம்
நடுவில்
மதில் மேல் பூனையெனப்
படுத்திருக்கிறது
தனிமை.
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget