சனி, 2 ஜூன், 2012

கோடையெனும் காதலி


1.
கோடைக்காலத்தில்
நான் எழுதிய கவிதைகளை
வாசித்துவிட்டு
தன்னைப் பற்றிய கவிதைகள்
ஏதுமில்லையென்று சினந்து
காறி உமிழ்கிறது கோடை..
பின்னர்
தகிக்கத் தொடங்குகின்றன
என் கவிதைகள் யாவும்..

2.
ஒரு மலரைப் போலவோ
சிறு தூறலைப் போலவோ
எப்போதும் இதமாய் இருப்பதில்லை;
ஒரு கோடையைப் போலவும்
உக்கிரமாய் இருக்கக்கூடும்
அன்பு.

3.
எல்லாக் கோடைகளிலும்
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்
சிறுவர்கள்.

4.
பேரன்பின் பிரகாசத்தால்
யாவற்றையும் நனைத்துக் கொண்டிருக்கிறது
கோடை..
வெறுப்பின் நிழலில்
பதுங்கிக் கொள்கிறார்கள்
மனிதர்கள்.

5.
யாரும் விரும்பாத
தனது முத்தங்களைச் சுமந்தபடி
மாலையில்
கடலுள் மாய்கிறது
கோடைச் சூரியன்.

6.
யுகம் யுகமாய்
நிராகரிக்கப்படும்
காதலைச் சேமித்தவாறு 
இம்முறையும்
கடந்து போகக்கூடும்
கோடையெனும் காதலி.
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget