சனி, 29 செப்டம்பர், 2012

வீடுகளைக் கனவு காண்பவன்


வீடுகளால் நிரம்பி வழியும்
கனவுகளுக்குச் சொந்தக்காரன் அவன்
வீடுகளைத் தவிர வேறெதையும்
அவன் கனவு காண்பதேயில்லை

அவன் கனவில் வரும் வீடுகள்
நகரத்து மாடி வீடுகளைப் போலவே
யாரும் எளிதில் அணுகமுடியாதவாறு
இரும்புக் கதவுகளோடும் குறைந்த வெளிச்சத்தோடும்
அமானுஷ்யமாய் இருக்கின்றன

மழையும் வெயிலுங்கூட
அவற்றின் ரகசியங்களை அறியமுடியாதவாறு
இறுகச் சாத்தப்பட்டிருக்கும் அவ்வீடுகளைக்
கதவுகளிடமிருந்தும் சாளரங்களிடமிருந்தும்
அவன் விடுவிக்கிறான்

எல்லா அறைகளும் படுக்கையறைகளாகவே
இருக்கும் அவ்வீடுகளில்
அவனோடு படுத்துறங்குவோர் யாவரையும்
அவன் முன்பே அறிந்திருக்கிறான்

கனவில் ஒருநாள் திடீரென மழைபெய்ய
அவன் வேறுவழியில்லாமல்
கதவுகளாலும் சாளரங்களாலும்
மழையின் முகத்தில் ஓங்கி அறைகிறான்

அதிர்ச்சியில்  கனவிலிருந்து வெளியேறிய மழை
யதார்த்தத்தில் நுழைய
திடுக்கிட்டுக் கண்விழித்தவன்
தன் கனவை வாரிச் சுருட்டிக் கொண்டு
ஓரிடம் தேடி ஒதுங்குகிறான்

கனவு வீடுகளில் அவனோடு
படுத்துறங்கியோர் யாவரும்
பக்கத்தில் ஒதுங்கியிருக்க
அவர்கள் அவனைக் கண்டு
புன்முறுவல் பூக்கிறார்கள்

நேரந்தெரியாத அந்த இரவில்
விடாமல் பெய்து கொண்டிருந்த மழையில்
அந்தச் சாலையோர சிறுவனின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாய்
நமுக்கத் தொடங்குகிறது


8 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காட்சிகள் கண் முன்னே தெரிந்து மனதை வருத்தப்பட வைக்கிறது...

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி திரு.தனபாலன்!

Seeni சொன்னது…

vethanai konda varikal!

sako..

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி சீனி அவர்களே!

சிவஹரி சொன்னது…

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_1097.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

அ. வேல்முருகன் சொன்னது…

புறாக்களுக்கு கூட
சருகில் வீடிருக்கு
மனிதர்களுக்கு?

அவர்களே
எழுப்பி கொள்வார்கள்தான்
ஆனால் அவர்களை
எழுப்ப வேண்டும்

அதை செய்வோம்
கனவிலிருந்து விடுவிப்போம்

அப்துல் காதர் சொன்னது…

தோழர் சிவஹரி, திண்டுக்கல் தனபாலன் மற்றும் அ.வேல்முருகன் அனைவருக்கும் எனது நன்றிகள்!

Twitter Bird Gadget