ஞாயிறு, 28 நவம்பர், 2010

பெருமலையொன்றின் அடிவாரமும் அதன் உச்சியும்..


.
.

பெருமலையொன்றின்
அடிவாரத்திலிருந்து
தொடங்குகிறது பயணம்..
முன்னரே தீர்மானிக்கப்படுகிறது
மலையின் உச்சியை அடைவதே
அதன் இலக்கென்று..
ஆயினும் பயணம் தொடங்கும் முன்
ஒருவரும் அறிந்திருக்கவில்லை
மலையின் உயரத்தை..

பயமுறுத்துவனவாகவும்
சவால் நிறைந்தனவாகவும் இருக்கின்றன
வழுக்குப் பாறைகள் நிறைந்த
மலையின் சரிவுகள்..
சமயங்களில் அவை
மலையடிவாரத்திற்கே
மீளக் கொண்டு சேர்த்து விடவும் செய்கின்றன
பரமபத பாம்புகளென..

பெரும்பாலோர் மலையடிவாரத்திலேயே
தங்கிப் போகிறார்கள்
அங்கேயே வசதியாயிருக்கிறதென்று..
வெகுசிலரே பயணத்தில்
முன்னேறிச் செல்கின்றனர்
கிழிந்து தொங்கும் சதைகளையும்
பொங்கிப் பெருகும் குருதியையும்
பொருட்படுத்தாது..

எப்போதும் கண்ணுக்கெட்டாத
மலையுச்சியும்
எப்போதும் தென்பட்டுக் கொண்டேயிருக்கும்
மலையடிவாரமும்
தொடர்ந்து
நிலைநிறுத்திக் கொண்டேயிருக்கின்றன
நினைவில் பயத்தை..

இடை தங்கிப் போனவர்கள் நீங்கலாய்
வெகு சொற்பமானவர்களே
மலையின் உச்சியை அடைகிறார்கள்
பயத்தினூடாய்த் தொடரும் பயணத்தில்..

தங்களுக்கிடையேயான
உரையாடலுக்குப் பின்
மலையுச்சியை அடைந்தவர்கள்
பிரமித்துப் போகிறார்கள்
தாங்கள் பயணித்து வந்த பாதைகள்
வேறு வேறானவை என்பதையறிந்து..

இறுதியாய்
கழுத்து நரம்புகள் புடைக்க
தொண்டையில் குருதி கசிய
அவர்கள் உரத்துக் கத்துகிறார்கள்-
மலையடிவாரத்தை விடவும்
மலையின் உச்சி
எவ்வகையிலும் மேம்பட்டதில்லையென்று..

அந்தப் பேரரவம்
எல்லையற்ற பெருவெளியெங்கும்
காற்றினூடே கலந்து விரவி
காணாமல் போய்விடுகிறது
பெருமலையின் அடிவாரத்தை
அடையும் முன்பாக..
.
.

1 கருத்துரைகள்:

அப்துல் காதர் சொன்னது…

நன்றி திரு.KANA VARO..

Twitter Bird Gadget