செவ்வாய், 17 ஜனவரி, 2012

குறுங்கவிதைகள்


1.சிறகசைத்து மேலெழும்பும் பறவைகள்
பின் வீழ்கின்றன
சில இறகுகள்.

2.பெய்யும் மழை
நனைந்து கொண்டிருக்கிறது
வறண்ட ஆறு.

3.கொள்ளை அழகு
எப்படி அழைப்பேன்?
பெயர் தெரியாத பூ.
.
.

திங்கள், 16 ஜனவரி, 2012

முகவரியற்ற துயரம்



யாரோ யாருக்கோ
எழுதிய இக்கடிதத்தை
என் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது
கடந்து போன வன்புயல்

மழையில் நனைந்திருக்கும் அது
கொஞ்சம் சேற்றையும்
நிறைய துயரத்தையும் சுமந்தபடி
என் கைகளில் கனத்துக் கொண்டிருக்கிறது

முகம் தெரியாத 
எவனோ ஒருவனின் வலிகளை 
வரிகளாய்க் கொண்டிருக்கும் அது
அவனது
வறுமை
இயலாமை
ஆற்றாமை என
துயரத்தின் பல பரிமாணங்களை
அடுக்கிக் கொண்டே செல்கிறது

பகிர்வதன் மூலம்
பெருந்துயரத்தைப் பாதியாக்கவே
எத்தனிக்கும் அது
எழுதப்பட்டவனிடம் எதையும்
யாசிக்கவுமில்லை; மண்டியிடவுமில்லை

புயல் விட்டுச் சென்ற சிதிலங்களின் நடுவே
நிராதரவாய் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில்
என் கைகள் பற்றியிருக்கும் இக்கடிதத்தால்
இச்சூழலின் துயரம் 
ஒரு காட்டாறென
மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது..
.
.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நினைவுக் கீறல்கள்

பாலினும் வெளுத்திருக்கும் என் பூனை;
அதன் இடக்கண்ணோ
வானின் நீலத்தை விழுங்கியிருக்கும்..
என்னையறிந்த யாவரும் என் பிள்ளையென்றே
கேலி செய்வர் அதனை;
இல்லையில்லை என்னை..

பூனை வளர்த்தல் பேரின்பமென்று
நான் சொன்னால் நீங்கள் நம்பிட வேண்டும்..
பூனை வளர்த்தல்
உங்கள் இதயத்தை மென்மையாக்குமென்று
நான் சொன்னால் நீங்கள் நம்பிட வேண்டும்..

எத்தனை அறிவு என் பூனைக்கென்று  நானறியேன்
ஆயினும் அடித்துச் சொல்வேன்
மற்றெந்த பூனையை விடவும் கூடுதலென்று..

என் வாழ்வின் கெட்ட நாளொன்றில்
தொலைந்து போனது என் பூனை..
ஏதாவது வண்டியில் அடிபட்டிருக்கக்கூடுமென்று
அச்சமூட்டினாள் அம்மா;
குறவன் குத்திப் போயிருக்கலாமென்று
நெஞ்சில் குத்தினார் எதிர்வீட்டுக்காரர்..
கிடைத்துவிடுமென்று
ஆறுதல் சொல்லவேயில்லை ஒருவரும்..

எதிர்ப்படுவோரிடமெல்லாம்
என் பூனை குறித்து விசாரிக்கும்போது
போலி வருத்தத்தோடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருந்தவர்கள்
கொஞ்ச நாள்களுக்குப் பின்
எரிச்சலோடு முறைக்க ஆரம்பிக்க
விசாரிப்பதை நிறுத்திக் கொண்டேன்..

என் பூனையோடு விளையாடும்
பக்கத்து வீட்டுச் சிறுவன் மட்டும்
என் துக்கத்தில் பங்கு கொண்டு
அவ்வப்போது ஆறுதல் சொல்வான்..

ஒருநாள் சிறுவன்
இன்னொரு பூனை வளர்க்கலாமென்றான்..
மனம் ஒப்பவில்லை..
வெள்ளை நிறத்தில் 
ஒரு கண் மட்டும் நீலமாயிருக்கும் பூனை
எங்கும் கிடைக்காது என்றேன்..
ஆமாமென்று ஆமோதித்தவன்
இப்போதெல்லாம் தன் வீட்டு நாயோடு
விளையாடிக் கொண்டிருக்கிறான்..

அடிக்கடி நீல வானை
அண்ணாந்து பார்த்து இப்போதெல்லாம்
நினைவு கூர்கிறேன் என் பூனையின் இடக்கண்ணை ..

அவ்வப்போது தடவிப் பார்த்துக் கொள்கிறேன்
பூனை என்னோடு விளையாடிய நாள்களில்
அது ஏற்படுத்தியிருந்த நகக்கீறல்களை..
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து வரும் அவையும்
ஒருநாள்  காணாமல் போய்விடக்கூடும்
எனது பூனையைப் போலவே..!
.
.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

மழைக்கால ஞாயிறு


பொழிந்தது போதுமெனச்
சற்றே ஓய்வெடுத்துக் கொண்டது வானம்..
இன்னும் தாகமெனத்
தவளைகளைத் தூதனுப்பியது பூமி..

இடையறாத இடியின் இரைச்சலில்
இயல்பிழந்தது இரவு..
நாயொன்றின் சோகந்தோய்ந்த முகத்தை
நிழலாடச் செய்தது தொலைவில் அதன் ஓலம்..
தள்ளிப்போன விடியலின் தயவில்
இன்னும் கொஞ்சம் நீண்டது
தடைபட்ட உறக்கம்..

புதிதாய்ச் சமைந்த பெண்ணென
மெல்ல எட்டிப் பார்த்த ஞாயிறு
பின் வெடுக்கென மேகக்கதவுகளின் பின்னே
தன் தலையை இழுத்துக் கொண்டது ..
பரபரப்பில்லாத இந்த மழைநாள் என்னைப்போலவே
ஞாயிற்றுக்கும் ஞாயிறென ஆனது..

வானத்தை வெறித்தபடி
வெறுமையாய்க் கழிந்த இம்மழை ஞாயிற்றில்
கடைசி வரை வெளியே வரவேயில்லை
நானும் ஞாயிறும்!



சனி, 26 நவம்பர், 2011

குறுங்கவிதை


சற்று முன்
நிலவை மறைத்திருந்த மேகம்
விலகிவிட்டது
ஆயினும்
கலங்கியிருக்கிறது குளம்
இப்போது.
.
.

சனி, 5 நவம்பர், 2011

ஆயுதம் கொல்வோம்!



யாரேனும் எங்கேனும்
நாள்தோறும் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி...
இனத்தின் பேரால்
மதத்தின் பேரால்
மொழியின் பேரால்
சாதியின் பேரால்
பட்டினியால்
துரோகத்தால்
அவமானத்தால்
ஏமாற்றத்தால்
வன்மத்தால்
இன்னும் எண்ணற்ற காரணங்களால்..

தேவபானங்கள் அருந்தி
கடவுளர்கள் மயங்கியிருக்கும் வேளைகளில்
இந்தச் சாவுகள் நிகழ்ந்து விடுகின்றன
அல்லது நிகழ்த்தப்படுகின்றன..

பின்னர் மயக்கந் தெளிந்து பதறியடித்து
கடவுளர்கள் விழித்தெழும் வேளைகளில்
சர்வாதிகாரிகள் சிலர் வன்முறையால் சாகடிக்கப்படுகிறார்கள்
சிலர் நாடு கடத்தப்படுகிறார்கள்
இன்னும் சிலர்
தண்டனை என்னும் பேரால்
அரசுகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்..

அவசர அவசரமாய்க் கூடும் அறிவுஜீவிகள்
பன்னாட்டுத் தொலைக்காட்சிகளில்
கலந்து விவாதிக்கிறார்கள்-
மரண தண்டனை தேவையா இல்லையா என்று..
விவாதங்கள் முற்றுப் பெறுவதற்குள்
நிகழ்ந்துவிடுகின்றன மேலும் சில மரணங்கள்..

ஆயுதங்கள் குவிந்துவிட்ட உலகில்
இரவில் ஆடைகளைக் களைந்து
ஆயுதங்களைத் தரித்தபடி உறங்குகிறார்கள்..
எதிரிகளுடன் சமாதானம் பேசும் வேளைகளில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை
கமுக்கமாய்த் தடவி உறுதி செய்தபடி
உரக்கப் பேசுகிறார்கள்..

எதிரிகள் தீர்ந்து போன வேளைகளிலும்
ஆயுதங்களில் துருவேறாமல் பாதுகாக்க
சகோதரர்களைக் கொன்று பழகுகிறார்கள்..
காரணம் கேட்டால்
தொன்மங்களைத் துணைக்கழைக்கிறார்கள்..
ஆயுதங்களும் தீர்ந்து போனால்
பின் சொற்களைக் கூர்தீட்டத் தொடங்குகிறார்கள்..

திட்டமிட்டு எல்லாப் பாவங்களையும்
செவ்வனே செய்து முடித்தபின்
பாவச்சிலுவைகளைச் சுமக்க
இன்னொரு இளிச்சவாயனைத் தேடுகிறார்கள்..

எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும்
எதையும் செய்ய வக்கற்றவர்கள்
கவிதைகள் எழுதிப் பரிசு பெறுகிறார்கள்
அல்லது
மேடைகளில் முழங்கிக் கைத்தட்டல் பெறுகிறார்கள்..

படைத்தவன் எனப் போற்றப்படுபவன்
எல்லாவற்றையும் கண்டு மனம் வெம்பியபின்
ஒருநாள் செத்துப் போகக்கூடும்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி..!



திசைகளைத் தொலைத்தவன்

.
.
யாரும் முன்னெப்போதும்
பயணித்திராத பாதைகளில் 
பயணித்திடவே எப்போதும் திட்டமிடுகிறேன்..

வெளிச்சத்தின் சுவடுகள் ஏதுமற்ற
இந்த இருள் பாதைகளையே
மீண்டும் மீண்டும் விரும்பித் தேர்கிறேன்..

வழி நடத்தவோ
பின் தொடரவோ யாருமற்ற
கைவிடப்பட்ட இந்தப் பாதைகளில்
வழித்துணை யாருமின்றி
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

கொண்டாட்டங்களுடன்
நகர்ந்து கொண்டிருந்தாலும் 
ஒரு பிண ஊர்வலத்தின் துயரங்கள் 
நிறைந்தே  தொடர்கிறது என் பயணம்..

யாரும் இப்பாதைகளில்
என்னைத் தொடர்ந்து துயருறுவதைத் தவிர்க்கவே
தடயங்களை அழித்தபடி
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்..

இந்தப் பாதைகளின் குறுக்கே
பள்ளத்தாக்கோ பெருமலையோ ஆழ்கடலோ
எதுவும் தடையென எதிர்ப்படலாம்..
எனினும் மாற்றுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தபடி
தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பேன்..

கைவிளக்கேந்திய கருணையாளன் எவனும்
எதிர்ப்படுவான் என்றோ
எனக்கு வழி காட்டுவான் என்றோ
இதுவரை ஆரூடம் சொல்லவில்லை
பட்சிகள் எவையும்..

என்னிடம் நம்பிக்கைகளுமில்லை;
அவநம்பிக்கைகளுமில்லை..
சொல்வதற்கென்றோ
விட்டுச் செல்வதற்கென்றோ எதுவுமில்லை..

திசைகளின் தேவையற்றிருப்பதால்
திசைகளைத் தொலைத்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் பயணம்..

பயணிப்பதைத் தவிர
வேறெதுவாய்  இருக்க முடியும்
ஒரு பயணியின் நோக்கம்..
நான் பயணி என்பதால்
பயணித்தேன்; பயணிக்கிறேன்; இன்னும் பயணிப்பேன்..!
.
.

திங்கள், 24 அக்டோபர், 2011

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..


இதுவரை நான்
காதல் வசப்படவுமில்லை;
காதல்
என் வசப்படவுமில்லை..!
--------------------------------------------
மனுக்கள் இல்லை என்னிடம்
குறையிருக்கிறது;
தீர்க்க வருமா காதல்..?
-------------------------------------------
தடுக்கி விழுமிடமெல்லாம்
கதவுகள்
தட்ட மனமில்லை;
தட்டாமலே திறக்குமா
காதல்..?
------------------------------------------
மயிலிறகு வேண்டுமென்றால்
மயிலிடம் கேட்டுக் கொண்டிருக்க
முடியாதுதான்;
ஆயினும்
வன்முறையில் வருமா காதல்..?
------------------------------------------
செடியிலேயே
காய்ந்து விடுகின்றன
பறிக்கப்படாத
என் தோட்டத்து ரோஜாக்கள்..
------------------------------------------
'அட'
என அசர வைக்கும்
பெண்களைச் சந்திக்க முடிவதேயில்லை
அடுத்த நாள்
ரயில் பயணத்திலும்..
-----------------------------------------
இன்னும்
தற்கொலை செய்து கொள்ளாதது
அதிசயம்தான்;
ஆண் குரல்களையே
கேட்டுக் கொண்டிருக்கும்
என் கைப்பேசி..
.
.

சனி, 10 செப்டம்பர், 2011

குறுங்கவிதைகள்


.
1. அமாவாசை இருட்டு
    எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 
    மின்மினிப் பூச்சிகள்.

2. பெருமழைக்கு அச்சாரம்
    இச்சிறு தூறலே போதும்
    மண்வாசம்.

3. எப்போது இறங்கியதெனத்  தெரியவில்லை
    நீராடிக் கொண்டிருக்கிறது
    குளத்தில் நிலா.  

4. ஆடைகள் அர்த்தமற்றவை
    அவிழ்த்தெறிகிறேன்
    இளவேனிற்கால நண்பகல்.

5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
    மேலும் மேலும் அணிகிறேன் 
    முன்பனிக்கால இரவு.

6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
    வேடிக்கை பார்க்கிறது வெளியே 
    நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.

7. அழகுப் பெண் 
    அருகில் அழகுக் குழந்தை
    தொலைந்த காமம்.

8. ஊற்றெடுக்கும் கவிதை
    எழுதியே ஆக வேண்டும்  
    மை தீர்ந்த பேனா.

9. ஓய்வைத் தேடும் கால்கள்
    சோராதிருக்கிறது மனம்
    இன்னும் முடியாத பயணம்.
.
.

சனி, 3 செப்டம்பர், 2011

புத்தாயுதம் - வீழ்த்தப்பட்டவனின் அல்லது சரணடைந்தவனின் ஒப்புதல் வாக்குமுலம்




ஒன்று:
கொஞ்ச காலம்
உன்னைத் தொடர்ந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
உன்னைத் தொடரவேயில்லை என்பதை..  

இரண்டு:
நானெப்படி
உன்னைத் தொடர்வேன்
நீயே விரும்பாதபோது..

மூன்று:
நிறைய மாறிவிட்டேனென்று
எல்லோரும் சொல்லும்போது 
நினைத்துக் கொள்கிறேன் 
உன்னை..

நான்கு:
நீ நிரம்பிய பின்தான் 
காலியானது
என் குடுவை..

ஐந்து:
உன் பிடிக்குள்
சிக்கிய பின்தான் 
தளர்ந்தது என் பிடி..

ஆறு:
எல்லாவற்றையும் பற்றியிருந்தேன்
சுமையாய் இருந்தது;
உன்னைப் பற்றினேன் 
இலேசாயிருக்கிறது..

ஏழு:
எங்கேயோ சிக்கிவிட்டேன்
என்கிறார்கள்;
இப்போதுதான் சுதந்திரமாயிருப்பதை
எப்படிச் சொல்வது..?

எட்டு:
எதிலேயோ வீழ்ந்து விட்டேன் 
என்கிறார்கள்;
எனது எழுச்சியை
எப்படிப் பறைசாற்றுவது..? 

ஒன்பது: 
பத்தாது ஆயுதம் என்றார்கள்;
புத்தாயுதம் இருக்கிறது என்றேன்
புது ஆயுதமா என்றார்கள்;
புத்த ஆயுதம் என்றேன்..!
.
.
Twitter Bird Gadget