திங்கள், 16 ஜனவரி, 2012

முகவரியற்ற துயரம்



யாரோ யாருக்கோ
எழுதிய இக்கடிதத்தை
என் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது
கடந்து போன வன்புயல்

மழையில் நனைந்திருக்கும் அது
கொஞ்சம் சேற்றையும்
நிறைய துயரத்தையும் சுமந்தபடி
என் கைகளில் கனத்துக் கொண்டிருக்கிறது

முகம் தெரியாத 
எவனோ ஒருவனின் வலிகளை 
வரிகளாய்க் கொண்டிருக்கும் அது
அவனது
வறுமை
இயலாமை
ஆற்றாமை என
துயரத்தின் பல பரிமாணங்களை
அடுக்கிக் கொண்டே செல்கிறது

பகிர்வதன் மூலம்
பெருந்துயரத்தைப் பாதியாக்கவே
எத்தனிக்கும் அது
எழுதப்பட்டவனிடம் எதையும்
யாசிக்கவுமில்லை; மண்டியிடவுமில்லை

புயல் விட்டுச் சென்ற சிதிலங்களின் நடுவே
நிராதரவாய் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில்
என் கைகள் பற்றியிருக்கும் இக்கடிதத்தால்
இச்சூழலின் துயரம் 
ஒரு காட்டாறென
மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது..
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget