ஞாயிறு, 25 ஜூலை, 2010

நீயே..


.
.
பகற்பொழுதுகளில்
ஆர்த்தெழும் என் காமப் பறவையின்
பெருஞ்சிறகுகளை
வெட்டி வீழ்த்தி விடுகிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்..!

இன்னும் பெரிதாய்
பின் நீயே
அதன் சிறகுகளை
வளர்த்தெடுக்கவும் செய்கிறாய்
இரவுப் பொழுதுகளில்..!
.
.

சனி, 24 ஜூலை, 2010

எல்லா மரத்தடியிலும் புத்தன்..


.
.
வழக்கமாய்
தன் நிழலில் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவன்
குறித்துக் கவலையேதும் கொள்ளாமல்
நெடிதுயர்ந்து நிற்கிறது
ஊரோரத்து வேப்பமரம்..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
அது பக்குவப்பட்டிருந்தது..

தன்னில் வந்தமரும் பறவைகள்
தனக்கானதல்ல என்பதையும்
அது அறிந்தேயிருந்தது..

எல்லாத் திசைகளிலும் நீண்டிருந்த
கிளைக்கரங்களால்
அது தன் இறைவனைத் தேடிக்கொண்டிருக்கவில்லை..

தன் பெருநிழல் குறித்தான
பெருமித உணர்வில்
அதன் தலைக்கனமும் கூடியிருக்கவில்லை..

தன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
அது மறுப்பேதும் சொல்லவில்லை..

தன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
தன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
அது எதிர்ப்பேதும் காட்டவில்லை..

அது அதுவாகவேயிருந்தது-
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

அது அதுவாகவேயிருந்தது-
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

ஒரு மரம்
முதலில் தானேயிருக்கிறது ஒரு புத்தனாய்;
அதைக் கண்டடைந்தவன்
பின் தானுமாகிறான்  ஒரு புத்தனாய்..

புத்தன் அறிந்திருப்பான்
ஒரு மரம்
உலகின் மற்ற எல்லா மரங்களின்
மூலங்களையும் தன்னுள் கொண்டிருப்பதை..

புத்தனுக்குரியவை
போதி மரத்தடிகள் மட்டுமல்ல;
இந்த வேப்பமரத்தடியிலும்
உருவாகலாம் ஒரு நவீன புத்தன்..

இந்நேரம் ஒரு புத்தன் ஆகியிருக்கக்கூடும்
இவ்வேப்பமர நிழலில்
வழக்கமாய் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவனும்..

ஆயினும்
ஒரு புத்தன்
உலகிற்கு அறிவித்துக் கொள்வதில்லை
தன்னை புத்தனென்று..

உலகை அறிந்து கொள்கிறான் புத்தன்;
உலகமோ அறிந்து கொள்வதேயில்லை புத்தனை..!
.
.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

அடித்து நொறுக்கு..!

.
.
அடித்து நொறுக்கு..!
உன் ஆத்திரம் தீரும் மட்டும்...
ஈவிரக்கமற்ற
இக்கொடுஞ்சமூகத்தின்
இழிவுகளை..!
.
.

சனி, 10 ஜூலை, 2010

காலமும் என் கனவுகளும்..


.
.
கருணையற்று
நீள்கிறது காலம்
என் கனவுகளைத் தின்றபடி..

தவிரவும்
என் கனவுகளுக்குள்  அடங்காதவாறு
அது எல்லையற்றுமிருக்கிறது..

ஏதாவதொரு புள்ளியில்
காலம் என்னையோ காலத்தை நானோ
கடந்துவிடக் கூடும்..

அதன் பின்னும்
காலத்தால் தின்றழிக்கப்பட்ட
என் கனவுகள் முன்னெடுக்கப்படும்
என்னைத் தொடரும் எவனோ ஒருவனால்..

எனினும்
இன்னும் வீச்சுடன்
காலம் அப்போதும் காத்திருக்கும் 
கனவுகளைத் தின்பதற்கென..!
.
.

சனி, 3 ஜூலை, 2010

கொடும் இரவுகளும் பாழும் பகல்களும்..

.
.
நீயற்ற
ஏக்கத் தனிமையில்
நீளும் இரவுகள்
நிரம்பி வழிகின்றன
உன் கனவுகளால்..

நிலவு சுடும்
அக்கொடும் இரவுகள்
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை இயற்கை..

ஒருவேளை
அது அறிந்திருக்கக் கூடும்-
நீ மீண்டும் வந்த பின்
பாழும் பகல்கள்  வேண்டாமென்று
பரிந்துரைப்பேன் என்பதையும்..!
.
.

சொல்லத்தான் நினைக்கிறேன்..

.
.
நீ
முகம் காட்டும் போதெல்லாம்
உன்னை
எதிர் கொள்ளத் திராணியில்லாமல்
எப்போதும் உனக்கு
முதுகு காட்டியே நிற்கிறது
என் காதல்..!
.
.

சனி, 19 ஜூன், 2010

எங்கெங்கு காணினும்..

.
.
கலைந்து கலைந்து
உருவங்கள்
சிதைந்து கொண்டேயிருக்கும்
மேகக் கூட்டங்களிலும்
இப்போது
உன் முகம் மட்டுமே
தெரிகிறதெனக்கு..!
.
.

செவ்வாய், 15 ஜூன், 2010

கடவுளர்கள் ஓய்வெடுக்கிறார்கள்..


.

அது 'அரக்கி'யாகி
அனேக காலமாகிவிட்டதென்பதை
அறியாமல் இன்னமும்
நீதியை 'தேவதை' என்போரே..
இப்போதேனும்
அதன் கோர முகம் கண்டீரா..?

உங்கள்
வலிய சட்டங்களின்
இண்டு இடுக்குகளுக்குள்
அதன் 'தேவதை முகம்'
புதைக்கப்பட்டு விட்டதை
இப்போதேனும் உணர்ந்தீரா..?

இனி உங்கள்
முறையீடுகளோ வேண்டுதல்களோ
தொழுகைகளோ பிரார்த்தனைகளோ
எதுவுமே செவிமடுக்கப்படாமல் போகலாம்..

காரணம்
கலிகாலமென்பது
ஒருவேளை உங்கள் கடவுளர்கள்
ஓய்வெடுக்கும் காலமாய்
இருந்தாலுமிருக்கலாம்..!
.
.

வியாழன், 10 ஜூன், 2010

பறவைகளற்ற வானம்

.
.
எதிரெதிர்த் திசைகளில்
சாலையொன்றைக் கடக்க நேர்ந்தபோதுதான்
எங்களுக்குள் நிகழ்ந்தது
அந்த முதலும் கடைசியுமான சந்திப்பு..

விளங்க முடியாத
சில கவிதை வரிகளை விடவும்
ஆழமாய் இருந்தன
சாலையைக் கடந்த பின்னும்
என் மீது நீடித்திருந்த அவளின் பார்வைகள்..

திருவிழாக் கூட்டமொன்றில்
குழந்தையைப் போல
குதூகலித்திருந்தது என் மனம்..

வானத்தை நோக்கியபோது
அக்கணம் அது பறவைகளற்றிருந்தது..!
என்னை மட்டும்
பறக்க அழைத்ததாய்த் தோன்றியது..

சிறகுகளின்றிப்  பறந்த
அத்தருணத்தைப்  போலவே
இருக்கின்றன
வாழ்வின் சில தருணங்கள்
விவரிக்க முடியாதவைகளாய்..!
.
.

இது நிலவுக் கவிதையன்று..


எங்கே உன் கவிதைகள்
எனக் கேட்ட உனக்கு
தருவதற்கென்று தற்சமயம்
நீ விரும்பும் கவிதைகளெதுவும்
கைவசமில்லை என்னிடம்..

இப்போதெல்லாம்
இயலாமையின் ஆற்றாமையின்
இருள் கவிந்தேயிருக்கும் என் கவிதைகள்
ஒருபோதுமுனக்கு உவப்பளிக்கமாட்டா..

உடைக்கப்பட்ட
என் நிலவின் துண்டுகளை
தங்கள் வீதிகளில் கண்டெடுத்தவர்களை
சேகரித்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன்
என் முகவரிக்கு..

முழுவதும் வந்து சேர்ந்த பின்
ஒருவேளை
நானுனக்குப் பரிசளிக்கக் கூடும்
நீ விரும்பியதொரு
நிலவின் கவிதையை.


Twitter Bird Gadget